×

ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு-விலங்குகளின் எண்ணிக்கை பதிவு செய்ய நடவடிக்கை

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து, பல்வேறு  வழிகளில் சேகரிக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கம்யூட்டர் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனக்கோட்டதிற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி) ஆகிய 4 சரகங்களில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை கால வன விலங்கு கணக்கெடுப்பும், டிசம்பர் மாதத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணியும் நடத்தப்படுகிறது. இந்தாண்டில், வனப்பகுதியில் குளிர்கால கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இப்பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த 5ம் தேதி அட்டகட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி முதல் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. சுமார் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வன கோட்டத்திற்குட்பட்ட பகுதியில், வனவர் மற்றும் வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 8 நாட்கள் நடந்த குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் பகுதியில் புலியின் கால்தடமும், போத்தமடை மற்றும் தண்ணீர் பள்ளம், சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடம் பதிந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் சிங்கவால்குரங்கு, வரையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் நேரடியாக பார்த்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்பணி நிறைவடைந்ததையடுத்து, தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்ட மாமிச உண்ணி மற்றும் தாவர உண்ணி விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கம்யூட்டர் மூலம் ஆன்லைனில் பதிவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையடிவாரம் அருகே உள்ள கிராமங்களில் விலங்குகள் இடம்பெயர்வதை தவிர்க்க, எங்கெங்கு அதிகளவு விலங்குகள் நடமாட்டம் உள்ளது என கண்டறியப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு-விலங்குகளின் எண்ணிக்கை பதிவு செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Anymountain Tigers Archive—Measure ,Annamalee ,Tigers Archive ,Pollachi ,Anymountain Tigers Archive ,Dinakaran ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது